Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

வால்ட் டிஸ்னி - கற்பனை உலகின் கதாநாயகன்

ST

உலகில் அதிகமானவர்களை சிரிக்க வைத்த மனிதர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று நமது வரலாறு சொல்லும். உயிருடன் உலா வந்து உலக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் சார்லி. ஆனால், உயிரில்லா ஒன்று சார்லி சாப்ளினுக்கு சமமாக உலக மக்களைச் சிரிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயமாக தெரிந்திருக்கும்.  85 ஆண்டுகளுக்கு முன்னர் கேலிச்சித்திர உலகில் முதலில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகில் அனைவரையும் மிதக்க வைத்த அக்கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). பெரியவர்களைகூட குழந்தைகளாக மாறி சிரிக்க வைத்த அம்மந்திர கதாபாத்திரத்தை இவ்வுலகிற்க்கு அளித்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney). பொழுதுபோக்கு என்ற உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்த அம்மந்திர மனிதரை பற்றி நாமும் தெரிந்து கொள்ளப்போகிறோம்.



வால்ட் டிஸ்னியின் குழந்தைப்பருவம் :

1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அமெரிக்காவிலுள்ள இல்லுனாஸ் (Illinois) என்னும் மாநிலத்தில் எலியாஸ் டிஸ்னி(Elias Disney) மற்றும் ப்ளோரா கால் டிஸ்னி(Flora Call Disney) என்ற தம்பதியர்களுக்கு மகனாய்ப் பிறந்தார் வால்ட் டிஸ்னி. இவருக்கு தன் சிறு வயதிலிருந்து ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் காணப்பட்டது. அவரின் ஏழு வயதின்போது அவர் ஓவியங்களை வரைந்து பக்கத்துக்கு வீட்டுகரர்களிடம் விற்பார். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதிலாக வால்ட் எப்போதும் தான் பார்க்கும் இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டு தனது நேரத்தை செலவிடுவார்.அவரது தந்தைக்கு இவரின் செயல் பிடிக்கவில்லை.இருப்பினும் வால்ட்க்கு பிடித்த துறையைத் தேர்வு செய்யுமாறு தாயார் வால்ட் டிஸ்னிக்கு ஊக்கமூட்டினார்.


வால்ட் டிஸ்னியின் கல்வி :

சிக்காக்கோவின் மெக்கின்லி ( McKinley High School) உயர்நிலைப் பள்ளியில் ஓவியம் (ம) புகைப்படத்துறையில் சேர்ந்து படித்தார் வால்ட் டிஸ்னி. ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் ஓவியத்திறமையை மேன்மேலும் அதிகரித்துக்கொண்டார்.  அவருக்கு மிகப் பிடித்த திரைப்பட உலக நாயகனான சார்லி சாப்ளினைப் போன்று வால்ட் தனது பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரிடம் கதை கூறுமாறு கேட்பார்கள் அவரும் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை கூறுவாராம். வால்ட் தனது தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் நிகழ்ச்சி அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் கலந்து கொள்வாராம்.



வால்ட்ன் முயற்சியும் தோல்வியும் :

1922-ம் ஆண்டு தனது 21 வயதின் போது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்னும் தன் முதல் நிறுவனத்தை அவரது சகோதரர் Roy உடன் இணைந்து தொடங்கினார். தன் மாமாவிடம் 500 டாலர் பணத்தை கடனாக கேட்டுப் பெற்று அந்நிறுவனத்தைத் தொடங்கினார் வால்ட். கேலிச்சித்திர படங்களை உருவாக்க சோதனை செய்து பார்த்தார் வால்ட். பின்னர் வால்ட் Alice in Cartoon land என்ற சித்திரத்தை தயாரித்தார் அது பெரும் தோல்வி அடைந்தது.இதன் விளைவாக நிறுவனமும் பாதிப்புக்குள்ளானது. இருப்பினும் அம்முதல் தோல்வி அவரை வருத்தமடைய செய்யவில்லை. தளராத மனம் கொண்ட வால்ட் டிஸ்னி அடுத்ததாக Oswald the Lucky Rabbit என்னும் புது கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அச்சித்திரம் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தது.பின்னர் அதன் உரிமையை மற்றொரு நபர் பறித்துக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அந்நிலையிலும் மனம் தளராத வால்ட் தனது சகோதரன் ராயுடன் இனி நாம் சுயமாக தொழில் செய்வோம் அதில் நமக்கு உறுதுணையாக நிக்கப்போவது ஓரு எலி. அது நமக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் என்று சொன்னார்.


மிக்கி மௌஸ் உருவான கதை :

அதன்பின் உலகிற்க்கு அறிமுகமான அந்த அதிசிய எலிதான் 'Mickey Mouse' முகம் மற்றும் இரு காதுகள் என்று மொத்தம் மூன்று வட்டங்களால் உருவானது தான் Mickey Mouse. உருவான ஒருசில ஆண்டுகளுக்கு உள்ளேயே இது மிகவும் உலகப்புகழைப் பெற்றது. இதன் பின்னர் வால்ட்ன் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் கொடுத்த வால்ட்தான் மிக்கிக்கு குரலும் கொடுத்தார். பின்னர் அவர் அடுத்தடுத்து Steamboat Willie, The Skeleton Dance போன்ற பல கேலிச்சித்திரங்களை உருவாக்கினார்.இருப்பினும் மக்கள் அந்த மிக்கி அடித்த லூட்டிகளை மட்டும் அதன் சேட்டைகளை மட்டுமே அதிகமாக பார்த்து ரசித்தனர். குழந்தைகள் அனைவரும் கற்பனை என்ற கடலில் மிதந்தனர். பெரியவர்கள் எல்லாரும் மீண்டும் குழந்தைகளாக மாறி தங்களது கவலைகளை மறந்து ரசித்து சிரித்தனர். 


டொனால்ட் டக் உருவான கதை :

1932-ம் வருடம் வால்ட் உருவாக்கிய 'Flowers and Trees' என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. Mickey Mouse என்ற சுட்டி எலியை கொடுத்த வால்ட் கேலிச்சித்திர உலகில் அடுத்து சிறப்பாக அறிமுகப்படுத்திய மாபெரும்வெற்றி கதாபாத்திரம் தான் 'Donald Duck' என்ற வாத்து. அவ்வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை நினைத்து இன்றளவிலும் தன் கவலைகளை மறந்து சிரிப்பவர்கள் பலர். 1937-ம் வருடத்தில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள நிற கேலிச்சித்திரத்தை உருவாக்கினார் வால்ட். அதை உருவாக்க அக்காலத்தில் ஆன செலவு என்ன தெரியுமா? ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அதிக பணச்செலவில் உருவான அப்படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது.


Disneyland உருவான கதை :

அதற்கு பின் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற பல கேலிச்சித்திர கதாபாத்திரங்களை வால்ட் உருவாக்கினார்.மக்களால் திரை உலகில் மட்டும் பார்த்து ரசிக்க முடிந்த கற்பனை உலகை நிஜ உலகில் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்பினார் வால்ட். 1955-ம் வருடம் 17 மில்லியன் டாலர் பணச்செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற மாபெரும் பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவிலுள்ள Oakland என்னும் நகரில் உருவாக்கினார் வால்ட். Disneyland பூங்காவானது முதல் ஆண்டிலேயே தோல்வியைத் தழுவும் என்று பலர் தனது கருத்தை தெரிவித்தனர். ஆனால், Disneyland பூங்காவை பார்வையிட வந்த பார்வையாளர்களோ அதை பூலோகத்திலுள்ள சொர்க்கம் என்று வர்ணித்தனர். முதல் 25 வருடங்களில் உலகத்தலைவர்கள் பலர் உட்பட 200 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்தனர். இன்றும் அதை வருடத்திற்கு சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்து ரசிக்கிறார்கள்.இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் நேரில் சென்று பார்த்து ரசித்து வர விரும்பும் கனவு உலகம் அது. வால்ட் சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பூங்கா இருந்தது.ஆனால் அதில் விளையாட கட்டணம் செலுத்த வேண்டும். வால்ட் அச்சமயத்தில் ஏழ்மையாக இருந்ததால் ஒரு தடவை கூட அவரால் அப்பூங்காவில் விளையாட இயலவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மாபெரும் விளையாட்டுப் பூங்காவை உருவாக்க வால்ட்-ஐ தூண்டிருக்க வேண்டும். இன்றும் கூட கேலிச்சித்திரம் என்றவுடன் நம் நினைவுக்கு வரக்கூடிய முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கேலிச்சித்திர கதாபாத்திரம் உருவான விதத்தை வால்ட் டிஸ்னியே ஒருமுறை கூறினார்.

"வாழ்க்கையில் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு கூட இல்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஒரு தடவை Manhattan-லிருந்து Hollywood-ஐ நோக்கி ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தேன். எப்போதும் போல நான் அப்போதும் என் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அந்நேரத்தில் என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் வரைந்த கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்."



வால்ட்ன் மறைவு :

கற்பனை என்னும் சொல்லிற்க்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்த வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ம் வருடம் டிசம்பர் மாதம் 15-ம் தேதி தனது 65-வது வயதில் இயற்கை எய்தினார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் கூட அவர் பல புதிய சிந்தனைகளை நிறைவேற்றுவதைப் பற்றி  சிந்தித்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரரான ராய்.அவர் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் அவரது சிந்தனைகள் மனித குலம் உள்ளவரை இவ்வுலகை விட்டு பிரியாது. 


வால்ட் டிஸ்னியின் வெற்றி ரகசியம் :

மனிதனால் முடியாதது என்று எதுவுமே இல்லை அதற்கு கனவை நினைவாக மாற்றும் இரகசியத்தை அறிந்திருக்க வேண்டும். அந்த இரகசியம் நான்கு C எழுத்துகளினுள் அடங்கியிருக்கிறது. Curiosity, Confidence, Courage, Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகும். இந்நான்கிலும் மிக முக்கியமானது தன்னம்பிக்கை தான். நீங்கள் ஏதாவது ஒன்றை உண்மையென்று நம்பினால் அதை மனப்பூர்வமாக எவ்வித கேள்விக்கும் இடம் கொடுக்காமல் நம்புங்கள் அதுதான் வெற்றியின் இரகசியம்.இவ்வாறு வால்ட் தனது வெற்றியின் இரகசியத்தைப் பற்றி கூறினார். வால்ட் டிஸ்னிக்கு வெற்றியைத் தேடித் தந்த அந்நான்கு C மந்திர வார்த்தைகள் நிச்சயம் நமக்கும் பொருந்தும். டிஸ்னியைப்போன்று ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் நிலைப்பாடு ஆகியவற்றுடன் சேர்த்து விடாமுயற்சியோடு செயல்பட்டோமேயானால் நாமும் நாம் அடைய வேண்டிய இலக்கை எளிதாகவும் விரைவாகவும் அடைய முடியும்.