Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்(Hans Christian Andersen)

ST

 வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களுக்கும் மீண்டும் ஒரு பருவத்திற்காக ஏங்குவார்கள் என்றால் அது நிச்சயம் குழந்தைப்பருவமாகத்தான் இருக்கும். மழலைப்பேச்சும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நிறைந்த அந்த குழந்தைப்பருவத்தில் வேறு எந்த தொல்லைகளும் இருக்காது என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம் அந்த பருவத்தில்தான் எந்த கட்டுப்பாடும் இன்றி கற்பனைகளில் மிதக்க முடியும். கனவுலகில் சிறகடிக்க முடியும். உங்கள் குழந்தைப் பருவத்தைச் சிறிது பின்னோக்கிப் பாருங்கள் அந்தப் பருவத்தைப் பற்றி உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயமாக உங்களது நினைவுக்கு வரும். அதுதான் fairy tales எனப்படும் புனைக்கதைகள். பெரும்பாலும் காட்டு விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு சிறிய நீதிகளையும், கருத்துகளைச் சொல்லும் ஓர் அற்புதப் புனைக்கதைகளின் தொகுப்புதான் fairy tales. இன்றுவரை உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களை கட்டுபடுத்தும், சிறுவர்களை கவர்ந்திருக்கும் அந்த புகழ்பெற்ற புனைக்கதைகளை நமக்கு தந்த ஓர் உன்னத மனிதரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் டென்மார்க்கில் பிறந்த புகழ்பெற்ற கதையாசிரியர் Hans Christian Andersen.



1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் பிறந்தார் கிரிஸ்டியன் ஆண்டர்சன். அவரது தந்தை ஒரு ஏழை செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் சேரிப்புற வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். தினசரி அவரது அப்பா அவருக்கு பல கதை படித்து சொல்வார். ஆண்டர்சன் சிறுவயதில் மிக உடல் மெலிந்தும், சுத்தம் இல்லாமலும் இருப்பார். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அவரை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. சிறுவயதில் பிள்ளைகளுக்கு நிறைய கனவுகள் இருக்கும் அல்லாவா!.அதைப்போல் ஆண்டர்சனுக்கும் ஒரு கனவு இருந்தது அவர் ஒரு பெரிய பாடகராக வரவேண்டுமென்று. வறுமையைப் போக்கிக்கொள்ள மற்றும் வாய்ப்புகளைத் தேடிக்கொள்ள அவர் தனது 11 - ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி டென்மார்க் தலைநகரமான Copenhagen வந்து சேர்ந்தார். Copenhagen தெருக்களில் பல பாட்டுகளைப் பாடி மக்களை கவர முயன்றார். ஆனால் அவருக்கு பாட்டுப் பாட வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.ஆனால், அதற்கான குரலோ, ஞானமோ அறவே இல்லை. அதனை ஒரு சில நாட்களில் புரிந்துகொண்ட ஆண்டர்சன் இசையுடன் நடனமாடி நடித்து மக்களை கவர நினைத்தார். அதில் அவருக்கு தோல்விதான் கிடைத்தது. ஆனால் எதையாவது செய்து புகழ்பெற வேண்டும் என்ற அவரது எண்ணமும் அதற்காக அவர் மேற்கொண்ட சிறந்த முயற்சிகளும் அவருக்கு எதிர்பாரத ஒரு பலனை பெற்று தந்தது. அப்போது டென்மார்க்கின் மன்னராக இருந்தவர் 6-ம் Frederick அவருக்கு தெரிந்த ஒரு பிரமுகர் ஆண்டர்சனின் முயற்சிகளைப் பார்த்துவிட்டு மனம் இறங்கி அவரது கல்விக்காக உதவி செய்யும்படி மாமன்னரிடம் கேட்டுக்கொண்டார். மன்னரும் ஆண்டர்சன் கல்வியறிவை பெற ஏற்பாடு செய்து தந்தார்.  கல்வி பயின்று பெரியவர் ஆனதும் பிள்ளைகளைக் குறிவைத்து எழுதத் தொடங்கினார் ஆண்டர்சன். 1828-ஆம் ஆண்டு அவர் சிரிப்பு மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த  'A Journey on Foot' என்ற சிறந்த நகைச்சுவை கதையை எழுதினார். 7 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் எழுதிய 'The Improvisatore' என்ற மிகச்சிறந்த நாவல் அவருக்கு மாபெரும் புகழைப் பெற்றுதந்தது. அவரது திறமையை பாராட்டிய டென்மார்க் மன்னர் ஐரோப்பா முழுவதும் அவர் பயணம் செய்ய ஆண்டர்சனுக்குத் தேவையான நிதியுதவி வழங்கினார். அவரது பயணத்தின்போது அவர் பல்வேறு புகழ்பெற்ற மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பின்நாட்களில் Thumbelina, The Little Mermaid, The Emperor's New Clothes,  Picture-Book without Pictures, The Tinderbox மற்றும் புகழ்பெற்ற Fairy Tales போன்ற புகழ்பெற்ற பல படைப்புகளை வழங்கினார். அவர் தன் வாழ்நாளில் சுமார் 350 கதைகளை எழுதினார்.ஆண்டர்சனின் படைப்புகளில் அவர் எழுதிய 'Fairy Tales' என்ற புனைக்கதைகள் அவருக்கு உலகப்புகழைப் பெற்று தந்தது. அந்த புனைக்கதைகளில் ஒன்று 'The ugly duckling' இதற்க்கு அழகில்லாத வாத்து என்பது பொருள். அந்த கதையில் ஒரு வாத்து மற்ற வாத்துகளைப் போல் தான் அழகாக இல்லை என்று கவலைப்பட்டது. அதன்பிறகு அந்த வாத்து அன்னமாக மாறுகிறது. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனின் வாழ்க்கைக்கு மற்றும் அந்த கதைக்கு அதிகளவு வேறுபாடுயில்லை. ஆண்டர்சனும் தன் சிறுவயதில் தன்னுடைய உருவத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டவர்தான். ஆனால் டென்மார்க் மன்னரின் ஆசி கிடைத்தவுடன் தன்னம்பிக்கை பெற்று தாழ்வு மனப்பான்மையை முழுவதும் மறந்து பிள்ளைகளின் வாழ்க்கையில் நீங்காத இடத்தைப் பிடித்தார். வெளித்தோற்றத்தை வைத்து எந்த ஒரு நபரையும் மதிப்பிடக்கூடாது அவர்களது உள்ளமானது அழகாக இருக்கும் என்ற அழகியக் கருத்தை அவர் தனது பல கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். 



தன் வாழ்நாளில் இரண்டுமுறை காதல் வசப்பட்டார் ஆண்டர்சன். ஆனால் இவ்விரண்டும் ஒருதலைக் காதலாக இருந்தது. 1875-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் தமது 70-ஆவது வயதில் அவர் தனிமையில் இருக்கும்போது இயற்க்கை எய்தினார்.அதாவது அவரது வாழ்க்கை தனிமையில் முடிந்திருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் தனிமையில்லாமல் பார்த்துக்கொள்பவை அவர் உருவாக்கித் தந்த 'Fairy Tales' கதைகள்தான்.அந்த கதைகள் மக்களை குறிப்பாக சிறுவர்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவைதான் 'The Fairy Tales'. தன்னைப்போன்று மிகச் சோகமான குழந்தைப்பருவம் பிறருக்கு ஏற்படக்கூடாது என்பது ஆண்டர்சனின் உயரிய எண்ணமாக இருந்தது. உலக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்த அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அவர் பிறந்த புனித தினத்தை 'Odin's story day' என கூறி கொண்டாடுகிறது டென்மார்க். புதிய பொருட்கள் வாங்குவதில் அவருக்கு எப்போதுமே அதித பிரியம் உண்டு. ஆனால், அவரது ஏழ்மை நிலைமையினால் அவரால் அவர் விரும்பியவற்றை வாங்க முடிந்ததில்லை.ஓர் பெரும் ஏழையாக பிறந்திருந்தாலும் உலக குழந்தைகளைக் கவரும் உன்னத படைப்புகள் பல தந்ததால், மிகவும் உலகப் புகழ் பெற்றார் ஆண்டர்சன். பல சாதனையாளர்களுக்கு வாழ்க்கை ழுவதும் துணை வந்தது வறுமைதான்.அதே வறுமைதான் இவருக்கும் துணை வந்திருக்கிறது. ஆனால் வறுமைக்கும், திறமைக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்பதை நிருபித்ததால்தான் வரலாறு ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் போன்றவர்களை நினைவில் வைத்திருக்கிறது. அவர் 'புனைக்கதைகள்' பல எழுதுவதில் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டிருந்ததால் அவரது நூல்கள் பல நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் வறுமைக்கு எல்லையுண்டு, ஆனால் திறமைக்கு எல்லையில்லை என்பதை தனது வாழ்க்கையின் மூலம் இவ்வுலகிற்கு நிருபித்திருக்கிறார். ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனைப் போல் நாமும் வறுமையை பொருட்படுத்தாமல் திறமையை மூலதனமாக்கி விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் உழைத்தால் உழைத்தால் நாம் நமது உயரிய இலக்கை அடைய முடியும்.